திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.70 திருமயிலாடுதுறை - திருவிராகம் பண் - பஞ்சமம் |
ஏனவெயி றாடரவொ டென்புவரி
யாமையிவை பூண்டிளைஞராய்க்
கானவரி நீடுழுவை யதளுடைய
படர்சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகதியின்
மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட
மூசுமயி லாடுதுறையே.
|
1 |
அந்தண்மதி செஞ்சடையர் அங்கணெழில்
கொன்றையொட டணிந்தழகராம்
எந்தம்அடி கட்கினிய தானமது
வேண்டில்எழி லார்பதியதாங்
கந்தமலி சந்தினொடு காரகிலும்
வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர்
சிந்துமயி லாடுதுறையே.
|
2 |
தோளின்மிசை வரியரவம் நஞ்சழல
வீக்கிமிகு நோக்கரியராய்
மூளைபடு வெண்டலையி லுண்டுமுது
காடுறையும் முதல்வரிடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி
யுதிர்த்திட நிரந்துகமழ்பூ
வாளைகுதி கொள்ளமடல் விரியமணம்
நாறுமயி லாடுதுறையே.
|
3 |
ஏதமிலர் அரியமறை மலையர்மக
ளாகியஇ லங்குநதலொண்
பேதைதட மார்பதிட மாகவுறை
கின்றபெரு மானதிடமாங்
காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை
கூடிவரு காவிரியுளால்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி
கமழுமயி லாடுதுறையே.
|
4 |
பூவிரி கதுப்பின்மட மங்கையர
கந்தொறும் நடந்துபலிதேர்
பாவிரி யிசைக்குரிய பாடல்பயி
லும்பரமர் பழமையெனலாங்
காவிரி நுரைத்திரு கரைக்குமணி
சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி
கொள்ளுமயி லாடுதுறையே.
|
5 |
கடந்திகழ் கருங்களி றுரித்துமையும்
அஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழும் மூவிலைநல் வேலுடைய
வேதியர் விரும்புமிடமாந்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு
தொண்டையெழில் கொண்டதுவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக
நாறுமயி லாடுதுறையே.
|
6 |
அவ்வதிசை யாரும்அடி யாருமுள
ராகஅருள் செய்தவர்கள்மேல்
எவ்வமற வைகலும் இரங்கியெரி
யாடுமெம தீசனிடமாங்
கவ்வையொடு காவிரிக லந்துவரு
தென்கரை நிரந்துகமழ்பூ
மவ்வலொடு மாதவிம யங்கிமணம்
நாறுமயி லாடுதுறையே.
|
7 |
இலங்கைநகர் மன்னன்முடி யொருபதினொ
டிருபதுதோள் நெரியவிரலால்
விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ
ரிருந்தவிடம் வினவுதிர்களேற்
கலங்கல்நுரை யுந்தியெதிர் வந்தகயம்
மூழ்கிமலர் கொண்டுமகிழா
மலங்கிவரு காவிரிநி ரந்துபொழி
கின்றமயி லாடுதுறையே.
|
8 |
ஒண்டிறலின் நான்முகனும் மாலுமிக
நேடியுண ராதவகையால்
அண்டமுற அங்கியுரு வாகிமிக
நீண்டஅர னாரதிடமாங்
கெண்டையிரை கொண்டுகெளி றாருடனி
ருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டல்மணல் கெண்டிமட நாரைவிளை
யாடுமயி லாடுதுறையே.
|
9 |
மிண்டுதிறல் அமணரொடு சாக்கியரும்
அலர்தூற்ற மிக்கதிறலோன்
இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு
மானதிட மென்பரெழிலார்
தெண்டிரை பரந்தொழுகு காவிரிய
தென்கரை நிரந்துகமழ்பூ
வண்டவை கிளைக்கமது வந்தொழுகு
சோலைமயி லாடுதுறையே.
|
10 |
நிணந்தரும் யானநில வானமதி
யாததொரு சூலமொடுபேய்க்
கணந்தொழு கபாலிகழ லேத்திமிக
வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம்
பந்தன்மயி லாடுதுறையைப்
புணர்ந்தமிழ்ப் பத்துமிசை யாலுரைசெய்
வார்பெறுவர் பொன்னுலகமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |